Powered By Blogger

95. மருந்து

அதிகாரம் #95 மருந்து
(உடற்பிணி வாராது காக்கும் முறைமை)
பொருட்பால் | அங்கவியல் | குறள்# 941-950

941
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று.

மருத்துவநூல் வல்லுநர்களால் வகுத்துச் சொல்லப்பட்டுள்ள வாதம், பித்தம், மற்றும் கபம், ஆகிய மூன்றனும் உடலுக்கு ஏற்றவாறு அல்லாது கூடவோ குறையவோப் பெறின், அதனால் உடலின்கண் நோய் உண்டாகப் பெறும். 

942
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

மனிதன் முன்னர் உண்ட உணவானது செரித்ததை அறிந்து, அதன் பின்னர், உணவைக் கொள்ளும் வழக்கத்தை கொள்வராயின், அதனால் உடலுக்கு மருந்து என ஒன்று தேவை இராது. 

943
அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

முன்னம் உண்ட உணவு செரித்ததை அறிந்தபின், அடுத்த வேளை உணவை அளவறிந்து உண்ணுதல் வேண்டும்; அதுதான், உடலுக்கான நெடுங்காலம் உயிர்ப்புடன் வாழ்வதற்குரிய வழியைக் கட்டமைக்கும்.

944

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

முன்னதாக உண்ட உணவு நன்கு செரித்ததை அறிந்த பிறகு, காலநிலை மற்றும் உடல் நிலைக்கு மாறுபாடான உணவை விலக்கி, உடலுக்கும் காலத்திற்கும் ஏற்றதான உணவைத் தெரிவு செய்து உண்ணுதல் வேண்டும்.

945
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

உடலுக்கு ஒவ்வாத உணவுகளை விலக்கி, உடல் நலத்திற்கு ஒப்பான உணவை அளவில் மிதமாகவும் உண்டு வந்தால், துன்பம் இல்லாது நெடுங்காலம் உயிர் வாழ்தற்கு வழி வகுக்கும். 

946
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.

உணவின் அளவை இன்னதென்று அறிந்து உண்பவரிடத்தில், நிலைத்த இன்பம் நிற்பதைப் போல், அளவறியாமல் உணவை மிக அதிகமாக உண்பவரிடம் நோய்கள் நிலைத்திருக்கும். 

947
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோய் அளவின்றிப் படும்.

ஒருவர் தமது வயிற்றுப் பசியின் அளவை அறியாமல், அதிகமான உணவை உண்பாராயின், அவரது உடலில் அளவறியப்படாத நோய்கள் உண்டாகி வளரும். 

948
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

நோய் இன்னதென்று ஆராய்ந்து நோய்க்கான காரணத்தையும் கண்டறிந்து, அந்த நோயை தீர்ப்பதற்குரிய வழியையும் அறிந்து தெளிந்த பின்னர் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளுதல் வேண்டும். 

949
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

மருத்துவம் கற்றோர், நோயுற்றவரின் வயது, நோயின் தாக்கம் அந்த நோயை போக்குவதற்கு தேவைப்படுகின்ற காலம் ஆகியவற்றை நன்கு ஆய்ந்தறிந்த பின்பு அதற்கேற்ப செயல்படுதல் வேண்டும்.

950
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான்என்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.

ஒருவரது நோய்க்கான மருந்து என்பதானது, நோயுற்றவர் மருத்துவர் நோயைத் தீர்க்கும் மருந்து நோயாளியின் அருகிலிருந்து உதவுபவர் என, நான்கின் வகைப்பட்டதாகும். 

வலை ஆசிரியர்

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *