Powered By Blogger

47.தெரிந்து செயல்வகை

(எந்த செயலையும் ஆராய்ந்தபின் செய்யும் திறம்)

பொருட்பால் | அரசியல் | அதிகாரம் 47 

461

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.

ஒரு செயலை செய்யும் முன், அதனால் விளையும் அழிவையும், கிடைக்கும் வருவாய்க் கணக்கையும் ஆராய்ந்து தெளிந்த பின், அச் செயலை தொடங்குதல் வேண்டும். 

462
தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.

தமக்கு நன்கு தெரிந்த வல்லுநர்களோடு ஆராய்ந்து தேர்ந்த பின், ஒரு  செயலைத் தொடங்குபவர்க்கு, அரிதான செயல் என எதுவும் இல்லை. 

463
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை 
ஊக்கார் அறிவுடை யார்.

பெரும் வருவாய் கிட்டுமென்ற ஆவலில், தன் கையிருப்பில் உள்ள மூலதனப் பொருளை இழக்கும் விதமான செயல் எதையும்  அறிவுடையவர்கள் ஒரு போதும் செய்ய மாட்டார்கள். 

464
தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.

இகழ்ச்சிக்கு ஆளாக நேரும் என அஞ்சும் அறிவுடையவர், அது போன்ற களங்கம் தரும் செயல் எதையும் செய்ய மாட்டார்.

465
வகையறச் சூழாது எழுதல் பகைவரைப் 
பாத்திப் படுப்பதோர் ஆறு.

முறையான திட்டமிடல் இன்றி, ஒரு செயலை செய்யத் தொடங்குவதானது, எதிரிகளை வளரும் நிலத்தில் நிலைபெறச் செய்வதற்கான வழியாகும். 

466
செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க 
செய்யாமை யானுங் கெடும்.

செய்வதற்கு ஆகாதவற்றை செய்யுங்கால், கேடு வரும்; செய்யத்தக்கனவற்றை செய்யத் தவறினாலும், அவ்வாறே கேடு உண்டாகப் பெறும்.

467
எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

ஒரு செயலை தொடங்கும் முன்பே, அதை செவ்வனே செய்து முடிக்கத்தக்க வழிகள் குறித்து எண்ணி ஆராய்ந்திடல் வேண்டும்; தொடங்கியபின் எண்ணுவது என்பது தவறு. 

468
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

ஒரு செயலை, செவ்வனே செய்து முடிக்கத்தக்க வழிகளை ஆராயாமல் தொடங்கினால், அதற்காக, பலர் துணையாக நின்று உதவினாலும், அச் செயலில் குற்றங்கள் வந்து கெடும். 

469
நன்றுஆற்ற லுள்ளும் தவறுஉண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை.

ஒருவர் செய்வது நன்மையாகவே  இருப்பினும், பிறரது பண்புநலன்களுக்கேற்றவாறு செயலாற்றவில்லை எனின், அங்கே பிழை நேர்ந்து விடலாகும். 

470
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.

தகுதிக்குப் பொருந்தாத செயல்களை உலகம் ஏற்பதில்லை.  ஆகவே, உலகத்தார் இகழாதவாறு, வழிமுறைகளை ஆராய்ந்த பின்னரே எந்தச் செயலையும் செய்தல் வேண்டும். 


வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *