Powered By Blogger

53. சுற்றந்தழால்

(சுற்றம் எனும் உறவினரைப் போற்றுதல்)

பொருட்பால் | அரசியல் | அதிகாரம் 53

521
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.

எல்லாம் இழந்து, வறிய நிலையில் வாழும் போதும், தம் பழைய உறவுகளின் சிறப்புகளை சிலாகித்துப் பாராட்டி, பெருமை கொள்ளும் பண்பு, சுற்றத்தாரிடம் மட்டுமே உள. 

522
விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா 
ஆக்கம் பலவும் தரும்.

ஒருவருக்கு, அன்பு குறையாத சுற்றத்தார் மட்டும் அமைந்து விட்டால், அது அவருக்கு, மென்மேலும் ஆக்கம் குறையாத செல்வ வளம், வளர்ச்சி பலவும் தரும். 

523
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் 
கோடுஇன்றி நீர்நிறைந் தற்று.

சுற்றத்தாரோடு அன்புகலந்து பழகி, மகிழ்ச்சி கொள்ளாதார் வாழ்க்கையானது, கரையில்லாத குளத்தினில், நீர் நிறைவதைப் போன்று, பயனற்றதாகும். 

524
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.

ஒருவர், தம் சுற்றத்தாரால், அன்பு கலந்து வாழும் வாழ்க்கையே, அவர் பெற்ற செல்வத்தால் பெற்ற பயனாகும். 

525
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.

சுற்றத்தார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து மகிழ்ந்தும், அவர்களோடு,  இன்சொல் பேசியும், அன்பு பாராட்டும் பண்புடையோர், சுற்றத்தார் பலராலும் சூழ வாழ்வார்கள்.

526
பெருங்கொடையான் பேணான் வெகுளி 
அவனின் 
மருங்குஉடையார் மாநிலத்து இல்.

ஒருவர், பெருங்கொடையாளராகவும், சினம் தவிர்த்தவராகவும் இருப்பாராயின், அவரை விடவும், சுற்றம் உடையவர் யாரும், இவ்வுலகில் இல்லை எனலாம். 

527
காக்கை கரவா கரைந்துஉண்ணும்; ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள.

காக்கையானது, தனக்கு கிடைத்தவற்றை மறைக்காமல், தன் சுற்றத்தாரையும் கூவி அழைத்து, அவர்களோடு பகிர்ந்து உண்ணும்; அத்தகைய குணமுடையார்க்கே, செல்வமும், உயர்வும் உண்டாகும். 

528
பொதுநோக்கான் வேந்தன், வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.

அரசர், எல்லோரையும், பொதுவில் ஒரே தன்மையராகப் பாராமல், அவரவர் சிறப்பிற்க்கேற்ப நோக்கி நடப்பவராயின், அதற்காகவே விரும்பி, சுற்றத்தார் பலரும் அவரைச் சூழ்ந்து வாழ்வர்.

529
தமராகிக் தன் துறந்தார் சுற்றம், அமராமைக்
காரணம் இன்றி வரும்.

முன்பு நல்ல சுற்றமாக இருந்து, ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்து சென்றவர்கள், பின்னர் பிரிந்ததன் காரணம், பொருத்தமில்லாதது என்று உணர்ந்த பின், தாமாக திரும்ப வந்து, சேர்ந்திட வருவர்.  

530
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்துஇருந்து எண்ணிக் கொளல்.

யாதொரு காரணமும் இன்றி, தம்மிடமிருந்து பிரிந்து சென்றவர், திரும்பவும் ஏதோ ஒரு காரணத்தால், உறவாட விரும்பி வருபவரை, நன்கு ஆராய்ந்த பின்பே சேர்த்துக் கொள்ள வேண்டும். 


வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *