Powered By Blogger

58.கண்ணோட்டம்

அதிகாரம்: 58. கண்ணோட்டம்பால் வகை: 2. பொருள்
இயல்: 5. அரசியல்

(பழகியவரைக் காணுங்கால் அவர் கூறியன மறுக்காமை)

571
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டுஇவ் வுலகு.

மனிதர்கள், தாம் பழகியவரிடத்தே அன்பையும் பரிவையும்  பகிரும், பேரழகுணர்வு மிக்க கண்ணோட்டம் கொண்டு திகழ்வதால் தான், இவ்வுலகம் சீர்பட நிலைத்து இயங்குகின்றது. 

572
கண்ணோட்டத்து உள்ளது உலகியல்; அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.

அன்பையும் பரிவையும் பகிர்ந்து வாழும், உலகியற் பண்பாகிய கண்ணோட்டத்தினாலேயே இந்த உலகம் இயங்குகின்றது; அத்தகைய கண்ணோட்டத்திற்கு மாறாக, உயிர் வாழ்பவர்கள் இந்த உலகிற்கு சுமையே அன்றி, வேறில்லை. 

573
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.

பாடலோடு பொருந்திராத இசையால் என்ன பயன்? அதுபோல் மனிதர்க்கு, பிறர்பால் அன்பும் பரிவும் கூடிய கண்ணோட்டத்துடன் பொருந்திராத கண்களால் பயன் ஏதும் இல்லை. 

574
உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்?

மனிதர்கள் பிறரிடத்தே தக்க அளவில் அன்பும் பரிவுமாகிய கண்ணோட்டத்தைப் பகிர்ந்திராத கண் என்பதானது, முகத்தினிற் இருப்பதைத் தவிர வேறு பயன் ஒன்றுமில்லை. 

575
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்; அஃதின்றேல்
புண்ணென்று உணரப்படும்.

மனிதரின் கண்ணிற்கு அணிகலனாகத் திகழ்வது பரிவென்னும் கண்ணோட்டமே ஆகும்; அது இல்லையேல் அது கண் அல்ல, வெறும் புண் ஆகும். 

576
மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு
இயைந்துகண் ணோடா தவர்.

ஒருவர் தமக்கு கண் இருந்தும் அன்பும் பரிவுமாகிய கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பாராயின், அவர் மரத்திற்கு ஒப்பானவராகக் கருதப்படுவார்.

577
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்; கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.

அன்பும், பரிவுமாகிய, கண்ணோட்டம் இல்லாதவர் கொண்டிருப்பது, கண் என்பதாகாது; கண் உடையவர், அன்பெனும், கண்ணோட்டம் இல்லாது இருப்பதும் இல்லை. 

578
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்துஇவ் வுலகு.

செயலாற்றுவதில் கடமை தவறாமையும், கருணை மிகுத்த கண்ணோட்டம் கொண்ட மனமுடைய வல்லவர்க்கும், இவ்வுலகம் உரிமை உடையதாகும். 

579
ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப்
பொறுத்து ஆற்றும் பண்பே தலை.

தம்மை வருத்துவோரிடத்தேயும், பரிவு காட்டும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம், தவறுகளைப் பொறுத்துக் காக்கும் பண்பே, சிறப்புடையதாகும். 

580
பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.

அனைவராலும் விரும்பத்தக்கதான நாகரிகம் மிக்க கண்ணோட்டம் உடையவர்கள், தம்மோடு நெருக்கமாக பழகியவர்கள், நஞ்சைப் பருகிடத் தந்தாலும், அதை விரும்பி உண்டு அவரிடத்தே அன்பு பாராட்டுவர்.

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *