Powered By Blogger

44.குற்றம் கடிதல்

(குற்றங்கள் இல்லாது வாழ்தல்)

பொருள் இயல் | அரசியல் | அதிகாரம்: 44 

431
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.

தான் என்னும் அகந்தை, அளவறியாக் கோபம், காமம் எனும் சிறுமை ஆகிய குற்றங்கள் இல்லாமல் வாழும் ஒருவரது செல்வ வளர்ச்சி மேன்மையுடையதாகும்.

432
இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா 
உவகையும் ஏதம் இறைக்கு.

வேண்டுவோர்க்கு ஈயாதத் தன்மையும், மாண்பில்லாத மானமும், தீயனவைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளும் சிறுமைத் தன்மையும் ஆட்சியாளருக்கு குற்றங்களாவன. 

433
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.

பழிக்கு அஞ்சும் மனம் கொண்ட சான்றோர், தினையளவு சிறு குற்றத்தையும், பனையளவிற்குப் பெரிதாக எண்ணி, குற்றம் வாராதுக் காத்துக் கொள்வர். 

434
குற்றமே காக்க பொருளாக; குற்றமே
அற்றம் தரூஉம் பகை.


குற்றம் என்பது அழிவைத் தரும் பகையாகும்; ஆகையால், தன்னிலிருந்து குற்றம் நிகழ்தல் கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு, தன்னைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும்.

435
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.


குற்றம் வருதற்கு முன்பே, அது வராமல் காத்துக் கொள்ளாதவரது வாழ்க்கையானது, நெருப்பின் முன்பாக வைக்கப்பட்ட வைக்கோல் குவியல் போல அழிந்து விடும்.

436
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு?

முதலில், தன் குற்றத்தை நீக்கி, பின்னர், பிறரது குற்றத்தைக் கண்டு ஆராயும் குணம் படைத்த தலைவனின் வாழ்வில் என்ன குற்றம் வரக்கூடும்?

437
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றிக் கெடும்.

செய்ய வேண்டிய நன்மைகளைச் செய்யாமல், வீணே சேர்த்து வைக்கப்பெறும் கருமியின் செல்வமானது, பயன் ஏதுமின்றி அழிந்து போகும்.

438
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன்று அன்று.

பொருளின்பால் கொண்ட பற்றால், வேண்டுவோர்க்கு ஈயாமல், சேர்த்து வைக்கும் மனம் படைத்த தன்மை, எல்லாக் குற்றங்களினும் பெருங்குற்றமாகக் கருதிடத் தக்கதாகும். 

439
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை; நயவற்க
நன்றி பயவா வினை.


எக்காலத்திலும், தன்னைத் தானே உயர்வாக எண்ணிக் கொண்டு வியப்பு கொள்ளல் கூடா; அத்தகைய நன்மை தராத செயலை, மனத்தாலும் எண்ணுதல்  கூடாது.

440
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.


தலைவனானவன், தன் விருப்பத்தை, பிறர் அறியா வண்ணம் செயல்படுத்தும் வல்லமை கொண்டவனாயின், அவனை அழிக்க எண்ணும் எதிரிகளின் சூழ்ச்சிகள் யாவும் பயனில்லாது போகும். 

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *