அதிகாரம்#24 | அறம் | இல்லறவியல் | குறள்கள்#231-240
231
ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
இல்லாதவர்க்கு கொடுத்து உதவும் குணமும், அதனால் அடையப்பெறும் புகழையும் விட, மனித உயிர்க்கு ஆக்கம் தரவல்லது வேறொன்றும் இல்லை.
232
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
போற்றுவோர், போற்றுவன எல்லாம், இல்லாதவர்க்கு கொடுத்து உதவுபவரைக் குறித்து சொல்லப்படும் புகழே ஆகும்.
233
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதுஒன்று இல்.
அழிவற்றதும் உயர்வானதுமான புகழைத் தவிர இவ்வுலகில், நிலைத்திருக்கக் கூடியது வேறெதுவும் இல்லை.
234
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
இனிவரும் உலகம், தம்மில் வாழும் அறிவார்ந்தப் பெருமக்களை போற்றாமல், நிலத்தில் நெடுங்காலம் நிலைத்து நிற்கவல்ல புகழ் கொண்டோரை மட்டுமே போற்றிக் கொண்டாடும்.
235
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது.
துன்பத்தினால் வரும் வலியிலும், தன் புகழ் வளர்ப்பதும், தன் சாவின் போதும் அப் புகழை நிலைநிறுத்துவதுமான வலிமையானது, அறிவாற்றல் மிக்கவர்க்கே உரியது; மற்றவர்க்கு அது அரிதான செயல்.
236
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
இவ்வுலகில் பிறந்தால், நிலைத்த புகழோடு வாழ்ந்திடல் வேண்டும்; அவ்வாறு புகழ் நிலைக்க வாழத் தவறின், இவ்வுலகிற் பிறத்தலினும் பிறவாமை நன்று எனலாகும்.
237
புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்?
புகழோடு வாழ இயலாதவர்கள், அதற்காகத் தம்மைத் தாமே நொந்து கொள்ள வேண்டும்; அதை விடுத்து, தம்மை இகழ்வோர் மீது வருந்துதல் எதற்கு?
238
வசையென்ப வையத்தார்க்கு எல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.
தமக்குப் பின் எஞ்சி நிற்கவல்ல, புகழ் எனும் அருஞ்செல்வத்தைப் பெறாமல் போனால், அது அவரது வாழ்வின் பழியென்று உலகம் கூறும்.
239
வசையிலா வண்பயன் குன்றும் இசைஇலா
யாக்கை பொறுத்த நிலம்.
புகழ் இல்லா வெற்றுடல் கொண்ட மனிதரைச் சுமக்கும் இப்பூமி, விளைச்சல் என்னும் பயனில்லாது வளம் குன்றிப் போய் விடும்.
240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.
ஒருவர் தம்மீது பழி வராமல் வாழ்கின்றவரே, உயிர் வாழ்பவர் ஆவார்; புகழ் இல்லாமல் வாழ்கின்றவரோ உயிர் வாழாதவர் ஆவார்.
அடுத்த அதிகாரம் ➤ 25.அருளுடைமை

