Powered By Blogger

75. அரண்

 அதிகாரம் #75 அரண்

(நாட்டிற்கான பாதுகாப்பு அமைப்பு)


பொருட்பால் | அங்கவியல் | குறள்# 741-750


741

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்

போற்று பவர்க்கும் பொருள்.


பகைவர் மீது படையெடுத்துச் செல்லும் அரசர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சி புகலிடம் தேடுவோர்க்கும் கோட்டை என்பதானது சிறந்ததாகும். 


742

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடையது அரண்.


தெளிந்த நீரும், வெட்ட வெளியாக  அமைந்த நிலப்பரப்பும், உயர்ந்த மலைத் தொடரும், அழகிய நிழல் சூழ் காடும் ஆகிய நான்வகை அங்கங்களையும் உடையதே நாட்டின் அரண்களாம். 

743

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்

அமைவரண் என்றுரைக்கும் நூல்.


பகைவர்க்கு எட்டாத உயரம், பகைவர்களை எதிர்கொண்டு செயலாற்ற ஏதுவான அகலம், யாராலும் தகர்க்க இயலாத உறுதித்தன்மை ஆகிய அமைப்புகளை உடையதே செயற்கை அரண் என நூல்கள் கூறும்.

744

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை

ஊக்கம் அழிப்பது அரண்.


பாதுகாக்கப்பட வேண்டிய இடம் சிறியதாக அமைந்து, உட்பகுதி பரந்த இடமாகவும், வெல்லும் பொருட்டு உள்நுழைந்து முற்றுகையிட்ட பகைவரின் மன ஊக்கத்தை அழிக்கவல்லதாகவும் இருப்பதே அரண் ஆகும். 

745

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்

நிலைக்குஎளிதாம் நீரது அரண்.


பகைவர் முற்றுகையிட்டு கைப்பற்றுதற்கு அரிதான நிலையில், உள்ளிருந்து போரிடும் படையணிக்குத் தேவையான உணவைக் கொண்டிருப்பதும், தொடர்ந்து வீரர்கள் போரிடுவதற்கு இலகுவான தன்மையதாய் அமைவதுமே அரண் எனப்படுவதாகும். 

746

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்

நல்லாள் உடையது அரண்.


போருக்கான எல்லாப் பொருட்களையும் உடையதாகவும், வெளியே முற்றுகையிட்டுள்ள எதிரிகளை வென்று வீழ்த்திட, உள்ளிருந்து தீரத்தோடு போரிடவல்ல வீரர்களை கொண்டதாகவும் இருப்பது அரண் எனப்படும். 

747

முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்

பற்றற்கு அரியது அரண்.


முற்றுகையிட்டோ முற்றுகையிடாமலோ போரிட்டும், சூழ்ச்சிகள் வஞ்சனைகள் பலவும் செய்த பின்னரும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதாய் திகழ்வதே அரண் எனப்படுவதாகும். 

748

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்

பற்றியார் வெல்வது அரண்.


போரில் முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு இயங்கும் பெரும்படையை, உள்ளிருந்தவாறே எதிர்கொண்டு அவர்களை வென்று காத்துக் கொள்ளும் தன்மையதைக் கொண்டது அரண் எனப்படுவதாகும்.  

749

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து

வீறுஎய்தி மாண்டது அரண்.


போர்முனையில் பகைவர் தோற்று வீழும்படியாக, உள்ளிருந்தே போர்த்திறம் கொண்டு தாக்குதல் நடத்திட ஏதுவான சிறப்புமிகும் தன்மை கொண்டு விளங்குவதே அரண் எனப்படுவதாகும். 

750

எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி

இல்லார்கண் இல்லது அரண்.


எத்தகு சிறப்புகளும் பெருமைகளும் கொண்ட அரண் அமையப் பெற்றிருந்தாலும், ஆங்கே போரிடும் வீரர்களிடத்தே பகைவர்களை வெல்வதற்கான செயல்திறம் இல்லையெனில், ஒரு பயனும் இல்லை.


◀| 74. நாடு
76.பொருள் செயல்வகை |
 
 இந்த அதிகாரத்தின் YouTube காணொலி: 

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *