அதிகாரம்.20 | அறம் | இல்லறவியல் | குறள்கள்#191-200
191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
192
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.
193
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை.
194
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து.
195
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.
196
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.
197
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.
198
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
199
பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
200
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
அடுத்த அதிகாரம் ➤ 21.தீவினையச்சம்
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
பலரும் கேட்பதற்கு வெறுக்கும்படியான, பயனற்றச் சொற்களைப் பேசுவோர், எல்லோராலும் இகழப்படுவர்.
192
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.
பலர் முன்னிலையில், பயனற்ற சொற்களைச் சொல்லுதல், நட்பிற்கு ஒவ்வாத செயல்களைகளை விடவும் தீங்கானது ஆகும்.
193
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை.
ஒருவன் பயனில்லாத பொருள் குறித்து, விரிவாகப் பேசுவதிலிருந்தே, அவன் அறநெறியற்றவன் என்பதை உணர்த்தி விடும்.
194
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து.
பயனும் பண்பும் இல்லாது பலர் முன்பாக பேசுவது, அறநெறிகளோடு சாராமல் நன்மைகளில் இருந்து நீங்கச் செய்து விடும்.
195
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.
நல்லப் பண்புடையவர்கள் பயனற்றச் சொற்களை சொல்வதினால், அவருடைய உயர்வும் மதிப்பும் ஒருசேர நீங்கிவிடும்.
196
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.
யாருக்கும் பயனில்லாதச் சொற்களைப் பேசிப் பயன்பெற நினைப்பவரை, மனிதர் என்றழைக்கலாகாது; மனிதருள் பதர், என்பதே பொருத்தமானதாகும்.
197
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.
இனிமையற்றச் சொற்களைக் கூட சொல்லலாம்; ஆனால், பயனில்லாதச் சொற்களைச் சொல்லாமல் இருப்பதே சான்றோர்க்கு நன்று.
198
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
அரிய பயன்களை ஆராய்ந்தறியும் ஆற்றல் பெற்றவர்கள், பெரிய பயன்களைத் தராத சொற்களை சொல்ல மாட்டார்கள்.
199
பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
மயக்கமில்லாத தெளிந்த அறிவுடையவர்கள் பயனில்லாதச் சொற்களை மறந்தும் கூட சொல்ல மாட்டார்கள்.
200
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
சொல்வதினால் பயன் தரும் சொற்களை மட்டுமே சொல்லுதல் வேண்டும்; பயனில்லாத சொற்களை சொல்ல வேண்டா.
அடுத்த அதிகாரம் ➤ 21.தீவினையச்சம்

