Powered By Blogger

92. வரைவின் மகளிர்

அதிகாரம் #92 வரைவின் மகளிர்
(பொருளை விரும்பும் பொதுமகளிர் இயல்பு)
பொருட்பால் | அங்கவியல் குறள்# 911-920

911
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.

அன்பின் பொருட்டு விரும்பாமல் பொருளை மட்டும் விரும்பி, விலைமாதர் பேசும் இனிய சொல்லை நம்பி அவர்களது வலையில் வீழும் ஒருவர்க்கு, இறுதியில் துன்பமே வந்து சேரும். 

912
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.

பெறப்படவுள்ள பயனை மட்டும் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப இனியவாக பேசும், விலை மாதரின் தீயொழுக்கக் குண இயல்பினை எண்ணிப் பார்த்து, அவர்களிடத்தே சேராது விலகி விடுதல் வேண்டும்.

913
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று.

பொருளை விரும்பும் விலைமாதரது பொய்யான தழுவலானது, இருட்டு அறையில் ஓர் அந்நிய பிணத்தைக் கட்டித் தழுவுதலைப் போன்றதாகும். 

914
பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.

அருளோடு கூடிய பொருளையும் விரும்பும் அறிவுடைய பெருமக்கள், பொருள் ஒன்றையே தேடும் விலைமகளிரது இழித்தக்கதான உடம்பை, ஒருபோதும் தீண்டமாட்டார். 

915
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.

இயற்கை அறிவினைக் கற்றறிந்த அறிவுடையோர், பொருளைத் தருவார் எல்லோர்க்குமாக, பொதுவாக இன்பந் தரவிழையும்  விலைமாந்தரின் இழித்தக்கதான உடலைத் தீண்டமாட்டார். 

916
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.

அறிவையும் புகழையும் கொண்டு, தம் நன்மைகளைப் பரப்பி, பிறர் பயனுற விரும்பும் சான்றோர், அழகைக் காட்டி, உடலை விற்று பொருள் ஈட்டும் பழிக்கத்தக்க நோக்கம் உடைய, விலைமாதரது தோளைத் தீண்டுதல் மாட்டார். 

917
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.

நெஞ்சத்தை அடக்கி ஆளும் மனஉறுதி இல்லாதவர்கள், உள்ளத்துள் அன்பு இல்லாது, பொருளுக்காக பிறரிடத்தே கூடும் இயல்புடைய விலைமாதரின் தோளைத் தீண்டுவர். 

918
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்குஎன்ப
மாய மகளிர் முயக்கு.

மனதில் வஞ்சகம் கொண்ட விலைமாதரிடம் மயங்கி வீழ்வது என்பதானது, ஆராய்ந்தறியும் அறிவு அற்றவர்க்கு, காம மயக்கம் ஊட்டி உயிரைப் பறிக்கும் மோகினியின் தாக்குதல் எனக் கூறுவர்.

919
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.

ஒழுக்க நெறிமுறைகள் யாதுமற்ற விலைமாதரின் மெல்லிய தோள் என்பது, குற்றத்தை ஆய்ந்தறியும் அறிவற்ற கீழ்மக்கள் வீழ்ந்து கிடக்கும் நரகம் ஆகும். 

920
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.

உள்ளத்தாலும் உடலாலும் தொடர்பில்லாத, இருவேறு நிலைப்பாடுடைய விலை மாதருடனான தொடர்பு, மது, மற்றும் சூதாட்டம் ஆகிய மூன்றனுடனும் திருமகளால் விலக்கப்பட்டவரே நட்புறவு கொண்டிருப்பர். 


வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *