Powered By Blogger

74.நாடு

அதிகாரம் #74 நாடு
(நாடு என்பதன் இன்றியமையா அங்கங்கள்)
பொருட்பால் | அங்கவியல் குறள்# 731-740

731
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வுஇலாச் 
செல்வரும் சேர்வது நாடு.

குறைவில்லா விளைபொருளும், சிறந்த அறம் மிக்க பெருமக்களும், கேடில்லாத செல்வத்தைப் பெற்றவரும் கூடி அமையப் பெற்று வாழுமிடமே சிறந்த நாடு எனப்படுவதாகும். 

732
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அரும்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.

மிகுந்த பொருள்வளத்தை உடையதும், எல்லோராலும் விரும்பத் தகுந்ததான, கேடு எதுவும் இல்லாதத் தன்மையோடும், குடிமக்களுக்கு நல்ல விளைச்சலை தரவல்லதுமாகவும் அமைவதுவே நல்ல நாடு என்பதாகும்.  

733
பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி 
இறைவற்கு
இறைஒருங்கு நேர்வது நாடு.

எதிர்பாரா நேர்வில் புதிய சுமைகள் பலவும்  ஒருங்கே வந்தபோதும், அச்சுமையை குடிமக்கள் எதிர்கொண்டு, தமக்கான வரியினங்களை அரசிற்கு மகிழ்வுடன் செலுத்தவல்லதான வளம் படைத்ததே சிறந்த நாடு என்ப. 

734
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு.

மக்களிடம் மிகுந்த பசியும் தீராத நோயும் புறத்தே நின்று ஊடுறுவி, அழிவு தரவல்லதான பகைமையும் இல்லாமல் இனியவாக இயங்குவதே சிறந்த நாடு என புகழப்படும். 

735
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.

மதம், சாதி, அரசியல், என பலவற்றுள்ளும் அநீதியான கருத்துமுரண் கொண்ட குழுக்களும், கூடவே இருந்து அரசைப் பாழ்படுத்தும் உட்பகையும், கொலைத் தொழில் செய்து அரசை வருத்தும் சமூகவிரோதிகளும் இல்லாது திகழ்வதுவே நாடு என்பதாம்.   

736
கேடறியாக் கெட்ட இடத்தும் வளம் குன்றா
நாடென்ப நாட்டின் தலை.

பகைவரால் கேடு என்பதையே அறியாத போதும், ஒருக்கால், கேடு நிகழ்ந்து விட்டால் அதனின்று மீண்டெழுந்து சீர் செய்துகொள்ள ஏதுவாய், எப்போதும் குன்றாத வளம் கொழிக்கும் நாடானது நாடுகளில் எல்லாம் தலைசிறந்ததாகும்.

737
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

ஆற்றின் வழியேயும் ஊற்றின் வழியேயும் கிடைக்கும் இருவகை நீர் வளமும், நீண்டு நெடிதமைந்த மலைத் தொடர்கள், காலந்தவறாமற் பொழிந்து நீர் வளம் தரும் மழை, வலிமை மிக்கதான கோட்டை ஆகியன ஒரு நாட்டிற்கு இன்றியமையா உறுப்புகளாவன.  

738
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்குஇவ் ஐந்து.

மக்கள் யாவருக்கும் நோயற்ற வாழ்வு, குறைவில்லாத செல்வம், வளமை மிக்கதான விளைச்சல், மக்களின் மகிழ்ச்சி மிக்கதான வாழ்வு, கட்டுக்கோப்பு மிகுந்த காவல் பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு எனக் கூறப்படும்.

739
நாடென்ப நாடா வளத்தன; நாடல்ல
நாட வளம்தரு நாடு.

முயற்சியும் தேடலும் இல்லாமலேயே, மக்களுக்கான வளம்  கொண்டு வளர்ந்து செழிக்கும் நாடே, நாடு என்பதாகும். வருந்தித் தேடி வளத்தினை தரும் நிலையில் உள்ள நாடானது, சிறந்த நாடு என்பதாகா. 

740
ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்துஅமைவு இல்லாத நாடு.

நாட்டில் ஒழுங்கமைந்த எல்லா நன்மைகளும் வளங்களும் வாய்க்கப் பெற்றிருந்தும், குடிமக்கள்பால் நல்ல அன்பும் சிறந்த பண்பும் இல்லாமல் ஓர் அரசு அமைந்து விட்டது எனின், அதனால் எந்த பயனும் இல்லை. 

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *