Powered By Blogger

32.இன்னா செய்யாமை

(பிற உயிர்க்கு துன்பம் செய்யாமை)

அதிகாரம்-32 அறம் துறவறவியல் குறள்கள் 311-320

311
சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா 
செய்யாமை மாசுஅற்றார் கோள்.

சிறப்பைத் தரக்கூடிய பெரும் செல்வத்தைப் பெறுவதாக இருப்பினும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருப்பதே மாசற்ற சான்றோரின் கொள்கையாகும்.

312
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா 
செய்யாமை மாசுஅற்றார் கோள்.

தன் மீது கர்வம் கொண்டு துன்பம் இழைப்பவருக்கு, திரும்பத் துன்பம் செய்யாமற் பொறுமை காப்பது, மாசற்ற சான்றோரின் கொள்கையாகும்.

313
செய்யாமல்  செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்.

பிறர்க்குத் தீங்கு செய்யாதவரிடத்தே, துன்பம் செய்பவருக்கு, அதனால் வரப்பெறும் கேடு அவருக்கு மீளாத் துன்பத்தைத் தரும்.

314
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

தமக்குத் தீங்கிழைப்பவரைத் தண்டிக்கும் வழி என்பது யாதெனின், அவரே நாணும்படி, திரும்ப அவருக்கு நன்மை செய்து விடுவதாகும்.

315
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை?

பிற உயிர்க்கு நேரும் துன்பத்தை, தமது துன்பம் போல எண்ணிக் காக்காது இருப்பவர்க்கு அறிவு இருந்தும் அதனால் என்ன பயன்?

316
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.

தம் வாழ்க்கையில் துன்பமானவை என்று கண்டு தெளிந்து உணர்ந்தவாறு, பிறரிடத்தே துன்பம் செய்யாதிருத்தல் வேண்டும்.

317
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

எந்த அளவாயினும், எப் பொழுதாகினும், எவரிடத்திலும் மனதால் எண்ணுவதாலும் துன்பந்தரும் செயல்களை செய்யாதிருத்தலே உயர்ந்ததாகும்.

318
தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.

எவையெல்லாம் தன் உயிர்க்குத் துன்பமானவை என்பதை உணர்ந்தவர்கள், அதே துன்பங்களைப் பிற உயிர்க்குச் செய்வது எதனாலோ?

319
பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா 
பிற்பகல் தாமே வரும்.

ஒருவர் முற்பகலில் பிறர்க்குத் துன்பம் இழைப்பாராயின், அவருக்குப் பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

320
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

தீமை செய்பவருக்கேத் தீமைகள் உண்டாகப் பெறும்; எனவே, தீமை இல்லாத வாழ்வை விரும்புகின்றவர், பிறர்க்குத் தீமை செய்ய மாட்டார். 

◀|அதிகாரம் 31.வெகுளாமை|
|அதிகாரம்33.கொல்லாமை|►

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *