Powered By Blogger

34.நிலையாமை

(காண்கின்ற யாவும் நிலையாதத் தன்மையதே)

அதிகாரம்#34 | அறம் | துறவறவியல் | குறள்கள்#331-341

331
நில்லாத வற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறி வாண்மை கடை.

நிலையில்லாதவைகளை நிலையானவை என எண்ணும் சிற்றறிவோடு வாழ்தல், மிகவும் இழிவானதாகும்.

332
கூத்துஆட்டு அவைக்குழாத் தற்றே பெரும்செல்வம்
போக்கும் அதுவிளிந்து அற்று.

ஒருவரிடம் பெரும் செல்வம் வந்து சேர்வதும், பின்னர் அது கரைந்து நீங்குதலும், கலைநிகழ்வின் போது அரங்கினுள் கூட்டம் கூடி, பின்னர் அது கலைந்து போவதைப் போன்றதே ஆகும்.

333
அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

செல்வம் சேருதல் நிலையற்ற இயல்பினது என்பதை உணர்ந்து, அது சேரும்போதிருந்தே, நிலையான நற்ச்செயல்களைச் செய்திடல் வேண்டும்.

334
நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்.

வாழ்க்கையை நன்கு ஆராய்ந்து உணர்ந்தவர்கள், வாழ்வின் ஒவ்வொரு நாள் என்பது, நம் உடலினின்று உயிரை அறுத்துப் பிரிக்கும் வாள் தான் என்பதை அறிவர்.

335
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.

நாவை அடைத்து விக்கல் மேலெழுந்து வருவதற்கு முன்பாக,  அதாவது நம் இறப்பிற்கு முன்னதாகவே, நல்ல அறச் செயல்களை விரைந்து செய்தல் வேண்டும்.

336
நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

நேற்றுவரை வாழ்ந்த ஒருவர் இன்றில்லை, என நிலையாமையைப் பெருமிதமாய் சொல்லிக் கொள்ளும் தன்மையது  இவ்வுலகு.

337
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.

ஒரு வேளையாவது, வாழ்க்கையின் தன்மையதை ஆராய்ந்து அறிய மாட்டாதவர்கள், கோடிக்கு மேலாய், பல வீண் ஆசைகளை மனதினுள் கோட்டை கட்டி உழல்வர்.

338
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.

நம் உடம்பிற்கும் உயிருக்குமான உறவென்பது, பறவையானது, தான் இருந்த முட்டையின் கூட்டைத் தனித்து விட்டுவிட்டு, வேறிடத்தேப் பறந்து விடுவதைப் போன்றதாகும். 

339
உறங்கு வதுபோலும் சாக்காடு; உறங்கி 
விழிப்பது போலும் பிறப்பு.

நிலையற்ற நம் வாழ்வில், இறப்பு என்பது உறக்கம் கொள்வதைப் போன்றும், பிறப்பு என்பது உறங்கியபின் விழிப்பதைப் போன்றதும் ஆகும். 

340
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் 
துச்சில் இருந்த உயிர்க்கு?

உடம்பினுள், ஓர் அங்கமாய் உறைந்திருந்த உயிரானது, தாம் பிரிந்ததும், அதற்கு, சென்று தங்கிட வேறு நிலையான புகலிடம் இதுவரையில் அமைந்திடவில்லையோ?

◀|அதிகாரம் 33.கொல்லாமை|
|அதிகாரம் 35.துறவு|►

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *