Powered By Blogger

86. இகல்

அதிகாரம் #86 இகல்
(மன வேறுபாடு எனும் பகைமை எண்ணம்)
பொருட்பால் | அங்கவியல் குறள்# 851-860

851
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.

இகல் என்னும் மன வேறுபாடு என்பது, எல்லா உயிர்களிடத்தேயும் இணங்கிக் கூடி வாழும் மனப்பாண்மை இல்லாது, பகைமை எண்ணம் விதைப்பதான தீயப் பண்பை வளர்க்கும் நோய் ஆகும். 

852
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கதி
இன்னாசெய் யாமை தலை.

மற்றவரிடத்தே இணக்கமான பற்றுதல் இல்லாது, வெறுக்கும்படியான செயல்களை ஒருவன் செய்தாலும், அவனிடத்தே மன மாறுபாடு காரணமாக பகையாக எண்ணி தீமை செய்யாதிருத்தலானது சிறந்த குணமாகும். 

853
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.

யாரொருவன் தாம் கொண்டிருந்த இகல் எனும் மனமாறுபாடு என்கிற துன்பம் தரும் நோயை தம் மனத்திலிருந்து அடியோடு அகற்றி விடுகிறானோ, அவன் இவ்வுலகில் நிலையான மாசற்றப் புகழைப் பெறுவான். 

854
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.

துன்பங்களுள் பெருந்துன்பமானது இகல் எனும் மன மாறுபாட்டால் விளையும் பகைமையுணர்வாகும்; அந்த உணர்வை ஒருவன் அகற்றி விட்டாலே, அது அவனுக்கு இன்பங்கள் யாவினும் சிறந்த இன்பம் தருவதாகும்.

855
இகலெதிர் சாய்ந்துஒழுக வல்லாரை யாரே
மிகல்ஊக்கும் தன்மை யவர்.

இகல் எனும் மன மாறுபாடான எண்ணம் உருவாகும் போது, அதை பொருட்படுத்தாமல் எதிர்வினையாற்றி நல்வழி செல்லும் வல்லமை உடையவரை வெல்லும் ஆற்றல் உடையவர் எவருமில்லை.  

856
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.

பிறரோடு மனம் ஒன்றாமல் இகல் எனும் வேறுபாடு கொண்டு, பகைமை காட்டும் வழக்கத்தை மிகவும் இனியதென எண்ணி செயல்படுவோர் வாழ்வு, தடம்புரண்டு விரைவில் அழிவுக்குள்ளாகும்.

857
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.

பிறருடன் இணங்கி வாழவியலாத இகல் எனும் பகை காட்டும் மனநிலையை மிகையாகக் கொண்ட தீய அறிவுடையவர்கள், வெற்றிக்கு உகந்ததான உண்மைப் பொருளைக் குறித்து அறிந்திட மாட்டார்.

858
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு.

இகல் என்கிற பகை மனப்பான்மையைப் பின்பற்றாது வாழும் முறைமை, செல்வத்தைத் தரும். மாறாக, இகல் என்கிற பகைமையை மிகையாகக் கொண்டு அதை ஊக்கப்படுத்தி வளர்ப்போர்க்கு தீமையே வந்து சேரும். 

859
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.

ஒருவன் பிறர் மீது இகல் எனும் பகை கொள்வதற்கு காரணம் இருந்தாலுமே, தனக்கு நன்மை வருவதாக இருப்பின், பகைமை கொள்ள எண்ணுவதில்லை; ஆனால், தமக்கு கேடு வருங்காலத்தில் காரணமே இல்லாவிடினும் மிகையான பகைமை எண்ணம் கொள்வான். 

860
இகலானாம்  இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.

இகல் ஆகிய பகைமை எண்ணம் கொள்பவர்க்கு, துன்பம் உண்டாகப் பெறும்; மாறாக, பகை எண்ணம் தவிர்த்து நட்புடன் இணங்கி வாழ்பவருக்கு, நல்ல நீதியெனும் செல்வச் செருக்கு மிக்க களிப்பான நிலை உண்டாகும். 

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *