Powered By Blogger

83. கூடா நட்பு

அதிகாரம் #83  கூடா நட்பு
(அகத்தான் இல்லா புறத்தான் நட்பு)
பொருட்பால் | அங்கவியல் குறள்# 821-830
821
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.

மனத்தளவில் இன்றி, நல்ல நண்பரைப் போல் நடித்து தமக்கான வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பவரது நட்பானது, இரும்பை வெட்டி முடித்ததும் தூக்கி வீசப்படும் அதன் தாங்குப் பட்டையைப் போன்றதாகும். (அதாவது, தாங்குவது போல் இருப்பினும் பிறன் வெட்டுதற்கு பயன்படுவதைப் போன்றதாகும்.)

822
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் 
மனம்போல வேறு படும்.

நட்புடையவர் போல் பழகி, மனத்தால் வேறுபட்ட எண்ணம் கொண்டோரது நட்பானது, நற்குணம் கொண்டவராய் நடித்து பாலியல் தொழில் செய்யும் பெண்டிரைப் போன்று உள்ளொன்றும் புறமொன்றுமாக வேறுபட்டு நிற்கும். 

823
பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர் 
ஆகுதல் மாணார்க்கு அரிது.

அறிவுசார் நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்தவராயினும், மனதால் பொருந்தாத குணமுடையவராய் இருப்பாராயின், அவர் மனம் திருந்தி உள்ளன்போடு பிறரிடத்தே நல்ல நட்பினராதல் என்பது அரிது.

824
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.

முகத்தினிற் புன்னகையோடு இனிமையாகப் பழகுவதைப் போல் நடித்து, பிறரைக் கெடுக்கும் எண்ணமுடைய வஞ்சகரிடம், நட்பு கொள்வதற்கு அஞ்சி அவரிடமிருந்து ஒதுங்கிடல் வேண்டும். 

825
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.

மனதால் நம்முடன் ஒருசேர அமையாது முரண்படும் ஒருவரோடு, அவரது சொல்லை நம்பி எந்தவொரு செயலுக்காகவும் தெளிவான முடிவு எதையும் எடுத்திடல் இயலாது.

826
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.

நண்பரைப் போன்று நம்மோடு நயமாகப் பேசினாலும், நம் மனதோடு ஒட்டாத தீயவர் ஒருவர் சொல்லும் சொற்களில் பரவிக் கிடக்கும் தீயத் தன்மைகள் விரைவில் வெளிப்பட்டுவிடும். 

827
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.

வில்லானது வளைந்து வணக்கம் சொல்வதைப் போல அமைந்தாலும், அதன் பின்விளைவு தீங்கு தருவதாகும்; அதைப் போன்றே பகைவரது நயமான சொல்லும் பின்னாளில் தீங்கு தருமென்பதால் அவற்றை ஏற்கக் கூடாது.

828
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் 
அழுதகண் ணீரும் அனைத்து.

பகைவர் வணங்கிக் தொழுகின்ற போது, அவர்தம் கைகளுள் கொடும் கொலைக் கருவி மறைந்திருக்கும்; அவர்கள் அழுது சிந்தும் கண்ணீரும் சதிச்செயல் மறைந்திருக்கும் தன்மையதே ஆகும். 

829
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.

புறத்தால் மிகையாக உறவாடி போலியான நட்புறவைக் காட்டியும், அகத்துள் நம்மை நகைத்து இகழ்ந்து மகிழ்வோரிடம், நாமும் புறத்தால் சிரித்து அவரை மகிழச் செய்து அகத்தால் அந்நட்பை நலியச் செய்திடல் வேண்டும். 

830
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.

பகைவருடன் நட்பு கொண்டு பழக வேண்டிய காலம் வருமானால், அத்தருணத்தில் முகத்தளவில் மட்டும் நட்பு கொண்டு, பின்னர் அகத்தளவில் அந்நட்பை விட்டுவிடல் வேண்டும். 

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *