(பிறர் செய்யும் உதவி மறவாமை)
101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
பிறர்க்கு எந்த உதவியும் செய்யாத போதும், அவர் நமக்கு செய்த எதிர்பாரா உதவிக்கு, வானமும் இப்பூமியும் கூட ஈடாகாது.
102
காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
நம் துன்பத்தின்போது, காலத்தில் பிறர் செய்த உதவி சிறியதெனினும், அது இவ்வுலகைக் காட்டிலும் மிகவும் பெரியது.
103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
பயனை எதிர்பாராமல், அன்பின் பொருட்டு பிறர் செய்யும் உதவியின் பயனால் வரும் நன்மையை ஆராய்ந்தால், அது கடலினும் பெரியதாகும்.
104:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
பிறர் செய்த உதவி திணையளவே சிறியதாயினும், அதன் பயனை உணர்ந்தவர், பனை அளவு உதவியென மதித்துப் போற்றுவர்.
105:
உதவி வரைத்தன்று உதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
பிறர் செய்த உதவிக்கு கைம்மாறாய் செய்யும் உதவி, முன் செய்த உதவியின் அளவின் தன்மையைப் பொறுத்ததன்று; அவ்வுதவியைப் பெறுவோரின் பண்பைப் பொறுத்தது.
106:
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
குற்றமற்றவர் நட்பை, ஒருபோதும் மறத்தல் கூடாது; அத்துடன், துன்பத்தில் உதவியவர் நட்பையும் கைவிடுதல் கூடாது.
107:
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.
துன்பத்தைப் போக்கிட உதவியவரின் நட்புறவை, சான்றோர்கள் தம் எழுப் பிறப்பிலும் நினைவில் வைத்து போற்றுவர்.
108:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
பிறர் நமக்குச் செய்த நன்மைகளை மறப்பது அறம் அல்ல; அவர் செய்த தீமைகளை, அப்போதே மறத்தல் நல்லது.
109:
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்.
ஒருவர் கொலைக்கு ஒப்பான கொடும் துன்பத்தை செய்தவராயினும், அவர் முன்னர் செய்த ஏதேனும் ஓர் உதவியை நினைக்குங்கால், அக் கொடிய துன்பமும் மறந்திடச் செய்யும்.
110:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
எத்தகு நல்லறத்தையும் அழித்தவர்க்கும் மீண்டெழுவதற்கு வழிகள் உண்டாகப்பெறும்; ஆனால், பிறர் செய்த உதவியை மறப்பவர்க்கு ஒரு நாளும் நல்வழி உண்டாக வாய்ப்பதில்லை.

