Powered By Blogger

48.வலி அறிதல்

(எல்லாவிடத்தும் வலிமை அறிந்து வினையாற்றல்)

பொருட்பால் | அரசியல் | அதிகாரம் 48 


471
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

செயலின் வலிமை, தனது வலிமை, எதிரியின் வலிமை அத்துடன் இருவருக்கும் துணையானவர்களது வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்த பின்னரே அச்செயலை செய்ய வேண்டும். 

472
ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச் 
செல்வார்க்குச் செல்லாதது இல்.

தம்மால் முடியும் என்பதைத் தெளிந்தபின், அதைச் செய்யத்தக்க வல்லமையைக் கண்டறிந்து, அதன்பால் உள்ள உறுதியோடு செயலாற்றுபவர்க்கு, முடியாத செயல் என ஒன்றும் இல்லை.

473
உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

தமது வலிமையின் அளவைப் பற்றி தெரியாமல், மன ஊக்கத்தால் உந்தப்பட்டு தொடங்கிய செயலை,  முடிக்க இயலாமல் இடையிலேயே கைவிட்டுக் கெடுவார் பலர். 

474
அமைந்தாங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னை 
வியந்தான் விரைந்து கெடும்.

பிறரிடத்தே மனமொத்து நடவாமலும், தன் வலிமை குறித்து அறியாமலும், தன்னை பெரும் வல்லவன் என, தம்மைத் தாமே வியந்து கொண்டிருப்பவன் விரைவில் அழிவான். 

475
பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகே ஆயினும், அளவிற்கதிகமாய் வண்டியில் ஏற்றினால், எடை தாங்காது வண்டிஅச்சு முறிந்து போகும்; தம் அரண் வலிமை மிக்கதென நினைப்பார்க்கு, பகை மிகுதியானால், அவ் வரணும் தாங்காமற் போகும்.

476
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி யாகி விடும்.

மரத்தில் ஏறுபவர், மன ஊக்கத்தால், நுனிக்கொம்பின் அளவு கடந்து செல்வாராயின், அவர் உயிருக்கே முடிவாகி விடும்; பகைவரிடத்தே தன் வலிமையின் எல்லையளவை உணராவிடில், அதுவே அரசர்க்கு ஆபத்தாகும்.

477
ஆற்றின் அளவறிந்து ஈக; அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.

பிறர்க்கு பொருளை வழங்கும் போது, தம் பொருளாதாரத்தின் அளவை அறிந்தபின் வழங்கிடல் வேண்டும்; அதுவே, தம் பொருளைக் காப்பதுடன், பிறர்க்கு வழங்குதற்கான சிறந்த நெறியுமாகும். 

478
ஆகு ஆறு அளவுஇட்டிது ஆயினும் கேடுஇல்லை
போகுஆறு அகலாக் கடை.

வருவாய் சிறியதாக இருப்பினும், அதை விடவும் செலவுகள் பெரியதாக இல்லாத வரையில் அதனால் கேடு ஒன்றும் இல்லை. ஆதலால், முதலுக்குத் தக்கன செலவிடல் நன்றாம்.

479
அளவுஅறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல 
இல்லாகித் தோன்றாக் கெடும்.

தனது இருப்பு, வருவாய், செலவு ஆகியவற்றின் அளவையறிந்து, அதற்கேற்ப வாழாதவருடைய வாழ்க்கையில், பல்வகையில் வளமும் வலிமையும் உள்ளது போல் தோன்றி பின்னர் அழிந்து விடும். 

480
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.

ஒருவர், தன்னகத்தே உள்ள செல்வ அளவைக் குறித்து ஆராயாமல், பிறர்க்கு அளவின்றிக் கொடுத்துக் கொண்டே இருப்பாராயின், அவரது செல்வம், விரைவில் அழியும். 

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *