Powered By Blogger

73. அவை அஞ்சாமை

அதிகாரம் #73 அவை அஞ்சாமை

(அவையின்கண் அஞ்சாது கற்றவை உரைத்தல்)

பொருட்பால் | அங்கவியல் குறள்# 721-730

721
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

சொல்லின் வகை அறிந்து தூய உள்ளம் கொண்டவர், கற்றோர் அவை, கல்லாதோர் அவை என்கிற வகை அறிந்து, அதற்கேற்ப பேசும் வல்லமை பெற்றவர் ஆதலால், அவர் சொல்லில் எப்போதும் பிழை செய்ய மாட்டார். 

722
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.

தாம் கற்ற எல்லாவற்றையும் கற்றோர் நிறைந்த அவையில், அவர்தம் மனதிற் பதியுமாறு உரைத்திட வல்லவர், கற்றார் எல்லாரினும் மேலானவராக மதித்துப் போற்றப்படுவார். 

723
பகையகத்துச் சாவார் எளியர்; அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.

போர்க்களத்தினுள் அஞ்சாமல் நுழைந்து, பகைவரிடத்தே போரிட்டு சாகத் துணிந்தவர் இவ்வுலகினிற் பலர் உளர்; ஆனால், கற்றோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாது நின்று பேசும் வல்லமைப் பெற்றவர் மிகச் சிலரே.

724
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.

தாம் கற்றவற்றை கற்றவர்கள் முன்பாக, அவர்கள் மனதிற் பதியும் வண்ணம் உரைத்திடல் வேண்டும்; தாம் கற்றதினும் மேலானவற்றை தம்மிலும் மேலாகக் கற்றாரிடமிருந்து அறிந்துகொளல் வேண்டும். 

725
ஆற்றின் அளவறிந்து கற்க; அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு.

அறிஞர் பெருமக்கள் கூடிய அவையின்முன் பேசும் ஒருவர், யார்க்கும் அஞ்சாத திறத்தோடு மறுமொழி உரைத்திடும் பொருட்டு சொல் இலக்கணம், அறிவுசார் தர்க்க நெறி யாவற்றையும் கற்றுத் தேர்ந்தவராகத் திகழ்ந்திடல் வேண்டும். 

726
வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு? நூலொடுஎன் 
நுண்ணவை அஞ்சு பவர்க்கு?

அஞ்சாமை இல்லாத ஒரு கோழையின் கையில் வாள் இருந்தும் அதனால் என்ன பயன்? கற்றறிவு மிக்க ஒருவர், நுண்ணறிவுடைய பெரியோர் நிறைந்த  அவையில் பேசுதற்கு அஞ்சுவாராயின் அவர் கற்ற நூல்களால் என்ன பயன்? 

727

பகைஅகத்துப் பேடிகை ஒள்வாள் அவைஅகத்து
அஞ்சும் அவன்கற்ற நூல்.

கற்றோர் கூடியுள்ள அவையின் முன்பாக பேசுதற்கு அஞ்சுகின்றவர் கற்ற நூல்களானவை, போர்க்களத்தில் பகைவரைக் கண்டு அஞ்சுகின்ற கோழையின் கையில் உள்ள கூரிய வாளைப் போன்றே பயனற்றவையாகும். 

728
பல்லவை கற்றும் பயம்இலரே நல்லவையுள்,
நன்கு செலச்சொல்லா தார்.

அறிவார்ந்த பெருமக்கள் கூடிய அவையின்கண், எல்லோரது மனதிற்பதியுமாறும் கருத்துக்களை எடுத்துரைக்கும் திறன் இல்லாதவராயின், அவர் பல்துறை அறிவுநூல்களைக் கற்றிருந்தாலும், இவ்வுலகினிற்கு பயனற்றவரே ஆவார். 

729
கல்லா தவரின் கடைஎன்ப கற்றறிந்தும்
நல்லார் அவைஅஞ்சு வார்.

அறிவுமிக்க பெரியோர் நிறைந்த அவையின்கண் பேசுவதற்கு அஞ்சுகின்றவர், அவர் எத்தனை அறிவு நூல்களைக் கற்றவராயினும், அவர் கல்லாதவரை விடவும் கீழானவர் என்றே கருதப்படுவார்.

730
உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.

அவையின்முன் நின்று தாம் கற்றவற்றை, கேட்போர் மனதிற்பதியும் வண்ணம் சொல்வதற்கு அஞ்சுபவர், உயிரோடு வாழ்பவராயினும் அவர் இறந்தவர்க்குச் சமமானவரென்றேக் கருதப்படுவார்.

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *