Powered By Blogger

45.பெரியாரைத் துணைக் கோடல்

(அறிவாற்றல் மிக்க பெரியோரைத் துணையாகக் கொள்ளுதல்)
பொருட்பால் | அரசியல் | அதிகாரம் 45

441

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல்.

அறத்தின் மாண்பை உணர்ந்த மூத்த அறிஞர்களின் நட்பைப் பெறுதலின் திறனை அறிந்து, அவர்களைத் துணையாகக் கொள்ளல் வேண்டும். 

442
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

தமக்கு வரும் துன்பங்களை நீக்கி, அவை மீண்டும் வராமல், முன்னரே காத்துக் கொள்ளும் திறம் கொண்ட பெரியோரைப் போற்றி, அவர்களைத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.

443
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

செயற்கரிய வல்லமை கொண்ட பெரியோரைப் போற்றி, அவர்தம் நட்பை தனதாக்கிக் கொள்ளுதல் என்பது, அரிய பேறுகள் யாவிலும் தலை சிறந்ததாகும். 

444
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.

தம்மை விட மிகுந்த அறிவுடனும், சிறந்த ஆற்றலோடும்  விளங்கும் பெரியவர்களிடம், நட்பு பாராட்டி, அவர் வழி நடத்தல் என்பது, வலிமைகளுள் எல்லாம் முதன்மையானது.

445
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

நல்ல வழிகளை ஆராய்ந்து அறிவுரை கூறத்தக்க அறிஞர்களைக் கண்ணாகக் கொண்டு உலகம் இயங்குவதால், அவ்வாறே, அரசும் அத்தகைய பெரியோர்கள் சூழ இயங்குதல் வேண்டும். 

446
தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்.

தகுதி மிக்க பெரியவர்களின் நட்பு கொண்டவராய், அவரது வழி நடக்கும் வல்லமை கொண்ட அரசரை, எதிரிகள் எதுவும் செய்திட இயலாது. 

447
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே 
கெடுக்கும் தகைமை யவர்?

குற்றம் கண்டால், கடிந்துரைத்து நல்வழியில் செலுத்தவல்ல, பெரியோரைத் துணையாகக் கொண்டு செயல்படும் அரசரைக் கெடுக்கவல்ல பகைவர் யார்?

448
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.

குற்றம் கண்டு கடிந்துரைத்து, அறிவுரை சொல்லத்தக்க பெரியோரைத் துணையாகக் கொள்ளாத அரசன், தம்மைக் கெடுக்கவல்ல பகைவர் இல்லாதபோதும் தாமே கெடுவான். 

449
முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்புஇலார்க்கு இல்லை நிலை.

முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வருவாய் இராது; அதுபோல, தம்மைத் தாங்கி நிற்க, பெரியோரது துணை இல்லாத அரசர்க்கு நிலைநிற்றல் எனும் உறுதி இராது.

450
பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

நல்லவர்களின் தொடர்பைப் பெறாது கைவிடுதல் என்பது, பலரோடு வரப்பெறும் பகைமையைக் காட்டிலும் பத்துமடங்கினும் மேலான தீமைகள் உடையதாகும். 


வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *